தேவதச்சனின் கவிதை முகம் 01.


தேவதச்சனின் முந்தைய கவிதையொன்றை சங்க இலக்கியப் பாடலுடன் ஒப்பிட்டு மனத்தொடர்புகளை ஆராய்ந்தமைக்குக் கடுமையாக எதிர்ப்பைப் பதிவு செய்திருந்தார்கள். அதில் அவர்களுடைய தேவதச்சன் மீதான மேலோட்டமான வாசிப்பும் சங்க நூல்கள் மீதான ஈர்ப்பின்மையையும் புரிந்து கொள்ளக்கூடியதாக இருந்தது. முன்முடிபுகளுடனும் ஒருவர் எடுத்த அரசியலைக் கொண்டு முன்வைக்கும் தவறான கருத்தாகவே அவற்றை நான் நோக்குகிறேன். எனது பதிவுகளை மறுக்கும் உரிமை அனைவருக்கும் உண்டு. அந்த மறுப்பை ஒற்றை வரியில் எழுதாமல் தர்க்கமாக விரிவாக எழுதினால். கவனப்படுத்தமுடியும்.  இங்கு நான் புரியாமல் எதையும் எழுதவில்லை. எல்லாம் இருப்பவையை வைத்தே எழுதமுடிகிறது.

எனது கவிதை வாசிப்பு அனுபவத்தில் இரண்டு கவிதைத் தேவர்கள் முக்கியமானவர்கள். ஒருவர் தேவதேவன். மற்றவர் தேவதச்சன். முன்னையவர்  கவிதையிலுள்ள ஆன்மீகத் தரிசனங்களை வாசிப்படிப்படையில் அடையாளம் காணவைத்தவர். பின்னையவர் காலந்தோறும் பயின்றுவரும் தமிழ்க் கவிதைகளின் மனத்தொடர்புகளை பேருணர்வை உண்டாக்கும் வரிகளின்படி குறியீடாக அறியப்படுத்தியவர். இதில் தேவதேவனின் கவிதை மரபினை கடந்த பதிவில் தெளிவாக எழுதியுள்ளேன். அதுபோல தேவதச்சனின் கவிதைகளிலுள்ள பழந்தமிழிலக்கிய மனத்தொடர்புகளையும் பதிந்துள்ளேன்.

இப்பொழுது தேவதச்சனின் கவிதைகள் சங்கக் கவிதைமீது ஈர்ப்பு உள்ளவையா? இல்லை அவர் கவிதைகள் வெறுமனே சமகாலத்தை மட்டுமே பிரதிபலிப்பவை என்று கருதமுடியுமா? என்று நோக்கவேண்டியுள்ளது. சமூகத்தில் பொருள்முதல்வாதக் கருத்தியலின் செல்வாக்குப் பெருகியதும் கருத்துவாத மற்றும் ரசனை அடிப்படையான விமர்சனங்கள் குறையத்தொடங்கிவிட்டன என்பதே உண்மை. குறிப்பாகத் தேவதேவன் மற்றும் தேவதச்சன் கவிதைகளை ரசனை அடிப்படையில் பகுத்து அதன் உட்பாகங்களை ஆராயும் விமர்சனங்கள் உண்டாக்கப்பட வேண்டும். இதனைத் தற்போதைய தமிழ் எழுத்துலகில் ஜெயமோகன் சற்றுக் கராராக மேற்கொண்டு வருகிறார் என்று நினைக்கிறேன். தேவதேவனின் கவிதையில் இந்துஞான மரபின் அடிப்படைகள் உள்ளன என்றால், தேவதச்சனின் கவிதையில் பழந்தமிழ் மனத்தின் நவீன கோலங்களை அடையாளம் காணமுடியும். அல்லது பழந்தமிழ் குறியீடுகள் நவீன வாழ்வுக்காக ஒதுக்கபடுகிறது என்றும் சொல்லமுடியும்.



புனல் நீர் எனும் தலைப்பில் தேவதச்சன் எழுதிய கவிதையொன்று உள்ளது.

"பூச்சிகள் போய்க்கொண்டிருக்கின்றன
மரணம் அடைந்த உடல்களை நோக்கி
பூச்சிகளை விலங்குகளை
பின்தொடரும் என் கண்கள்
ஒரு தொலைவுக்கு மேல்
திகைத்து நிற்கின்றன.

என் அருகில் நின்றபடி உலவும் 
கணியன் பூங்குன்றனின் விரல்கள் 
சுட்டுகின்றன.
மலையாற்றில் மிதந்தபடி செல்லும் 
புணை ஒன்றை நான் பார்க்கும் ஆற்றுக்கு 
ஊர்கள் போவதுமில்லை. மறைவதுமில்லை.
என் கண்கள் கூடவே பார்க்கின்றன.
போய்க்கொண்டும் இருந்துகொண்டும் இருக்கும்
வேகப்புனலை
அப்புனல் நீரில்
என்கால்கள் நனைகின்றன.
கண்கள் ஈரமாகின்றன."

இதிலுள்ள கணியன் பூங்குன்றன் என்ற பெயர்க்குறியீடு எந்த நோக்கத்துக்காகக் கவிஞரால் உள்ளீடாக்கப்பட்டுள்ளது. அது "யாதும் ஊரே யாவரும் கேளிர்" என்பதன் உள்ளளுத்தமா என்பதை நாம் நோக்க பார்த்தால், பூங்குன்றனின் விரல்கள் சுட்டுவது எதனை? "மலையாற்றில் மிதந்தபடி செல்லும் புணை ஒன்றை" (புணை என்பது படகு) அடுத்துவரும் வரி "நான் பார்க்கும் ஆற்றுக்கு ஊர்கள் போவதுமில்லை. மறைவதுமில்லை" என்ற இந்த வரி "நான் பார்க்கும் ஊருக்கு ஆறுகள் போவதுமில்லை. மறைவதுமில்லை" என்று வந்திருந்தால் இக்கவிதையானது பழமையான முறையில் கவிதை  சொல்லும் யுக்தி என்றாகியிருக்கும். பூங்குன்றனை இதற்குள் இணைத்தமைக்குப்  பிரயோயனமே இல்லாமல் போயிருக்கும். அந்த மரபினை மாற்றியமை இக்கவிதையின் உள்ளடக்கத்தின் வெற்றி என்றே கருதமுடியும். அதில்தான் தேவதச்சனின் கவிதைகள் தனித்துவத்தை அடைகின்றன. இதனைத் தேவதச்சன் எழுதிய மிக நுட்பமான கவிதைகளில் ஒன்றாகக் கூற முடியும்.

பூச்சிகளையும் விலங்குகளையும் பின்தொடர்ந்து பார்க்கும் கண்கள் ஒரு கட்டத்தில் திகைப்படைகின்றன. அதற்குக் காரணம் மரணமாக இருக்கலாம். அல்லது மரணம் பற்றிய தேடலால் உண்டான விரக்தியாக இருக்கலாம். "தொலைவு" என்பதை அப்படியான ஒரு அர்த்தத்தில் வைத்தே அணுகமுடியும். ஏனென்றால் கணியன் பூங்குன்றனின் வரிகளை ஞாபகப்படுத்தினால் இதற்கான குழப்பம் தீரும். அத்துடன் இதனை இன்னொரு அர்த்தம் நோக்கி விரிக்கலாம்.

"தீதும் நன்றும் பிறர் தர வாரா
நோதலும் தணிதலும் அவற்றோரன்ன
சாதலும் புதுவது அன்றே வாழ்தல்"

இதில் சாவு என்பது புதியது அல்ல என்று கூறப்படுகிறது. அதேபோல "தொலைவுக்கு மேல்" என்ற தேவதச்சனின் வரிகளை மரணம் பற்றிய அயர்ச்சியாகவும் எடுத்தாளமுடியும். தொடர் மரணங்களால் அதனைத் தாங்காத மனம் திகைத்தது என்ற ஆழமான கருத்துக்களால் முழுமையடைகிறது தேவதச்சனின் இவ்வரிகளுக்கான அர்த்தம்.

அத்துடன் கண்கள் திகைத்து நின்றது மரணத்தைக் கண்டு என்றால், முடிவில் வரும் "என் கண்கள் கூடவே பார்க்கின்றன" என்பது கூறிப்பது எதனை என்று  பார்த்தால், வழக்கமாக நமது மரபில் நீர் என்பது புனிதப்படுத்தலுக்கானது. தீட்டு தொடக்கம் இதர ஆன்மீக நிகழ்வுகளுக்கு நீரைத் தூய்மைப்படுத்தல் என்ற அர்த்தத்தில் உபயோகிக்கிறோம். இங்கு ஆரம்பத்தில் மரணத்தைக் கண்டவர் நீரின் மூலம் தூய்மையாக்கப்படுகிறார் என்றும் கருதமுடியும். அதற்குத்தான் "அப்புனல் நீரில் என்கால்கள் நனைகின்றன. கண்கள் ஈரமாகின்றன" என்பதாக இறுதி வரிகள் அமைகின்றது. 

"கல்பொருது இரங்கும், மல்லல் பேர்யாற்று 
நீர்வழிப் படூஉம் புனை போல், ஆருயிர்
முறைவழிப் படூஉம் என்பது திறவோர்" 

இந்த வரிகளை மீட்டுருவாக்கம் செய்து, அக்காலத்தில் இல்லாத மரணம் பற்றிய வைதீக விடயங்களை நவீன கவிதைக்குள் தேவதச்சன் புகுத்தியுள்ளார்.
ஆரம்பத்தில் தேவதச்சனின் காதல் கவிதையைக் கபிலரின் காதல் கவிதைகளுடன் மனத்தொடர்பைக் கொண்டு ஒப்பிட்டு நிறுவ முயன்றிருந்தேன். ஆனால் இக் கவிதை நேரடியாகவே தத்துவத்தைக் கூறுவது. அதனால் இதற்குள் வரும் மரணம், தொலைவு, புணை, வேகப்புனல், நனைதல், ஈரம் என்பன சங்கக் கவிதையின் நவீன முகம். இரண்டிலும் இருக்கும் அர்த்தங்கள் வேறுவேறானவை.



ஒரு படைப்பாளியின் ஆழ்மனத்தில் இருக்கும் இலக்கியமனம் தத்துவங்களாலும் நாம் பயின்றுவரும் பழந்தமிழ் தூல்களாலும் அது அளித்த வாழ்வினாலும் ஆனது. அதில் இருந்துதான் கவிதை பற்றிய எனது  பார்வை அமைகிறது. எந்தக் கோட்பாட்டுக்குள்ளும் செல்லாதது. ஏனென்றால் தமிழில் எழுதப்படும் கவிதைகளில் என்பது கோட்பாட்டின் கூறுகள் அவ்வளவாக இல்லை. அப்படி இருந்தால் அதனை வலிந்து எழுதிய கவிதையென்றும், வலிந்து திணித்த கோட்பாடு என்றுமே வகைப்படுத்த முடியும். தேவதச்சன் தத்துவம் மீது ஈடுபாடு கொண்டவர். அவர் கவிதைகள் தமிழ் மரபினை நவீனத்தின் உச்சத்தில் நின்று பிரதிபலிப்பவை.

தொடர்புடைய பதிவுகள்


தேவதேவனின் கவிதை மரபு

தேவதச்சனும் குறுந்தொகைக் கபிலரும்

(தொடரும்)

00

Comments

Popular Posts