கவிதைகளின் ஆழ்முகம்:Aesthetic View-1 கவிதைகளை இரண்டாகப் பிளந்தவர்கள். Poetry Cleft & Indentation

A: கவிதைகளை இரண்டாகப் பிளந்தவர்கள். Poetry Cleft & Indentation.
======
ரமேஷ்-பிரேமின் 'சக்கரவாளக்கோட்டம்' என்ற கவிதை நூலை வாசித்த பின்னர் எதேச்சையாக 'றியாஸ் குரானா'வின் 'சில நினைவின் காலடி' என்ற குறுங்கவிதையினையும் வாசிக்க நேர்ந்தது. நான் வாசித்த றியாஸ் இன் முதல் கவிதை இது என்றுதான் சொல்ல வேண்டும்.
மேற்சொன்னவர்கள் இரட்டையர். கீழுள்ளவர் தனித்த படைப்பாளி. இருவரின் ஒற்றுமை நவீனத்துவத்தைத் தாண்டிய கவிதைகள் எழுதுவது/எழுதியமை. (பின்நவீனத்துவமாகவும் இருக்கலாம்.)

"இரண்டாகப் பிளந்த" விடயத்தை கவிதைக்குள் இவர்கள் இருவரும் கையாண்டுள்ளனர். பொதுவாக 'வெட்டியடிக்குது மின்னல்' என்று பாரதியாரின் வரிகளை சாதாரணமாக அனைத்தின் பிளவிலிருந்தும் நாம் உணர்ந்து கொண்டதுண்டு.(Lightning, Valley etc). பிளத்தல்×இரண்டாகப் பிளத்தல் இவ்விரண்டு வார்த்தைப் பிரயோகங்களுக்குள் கவித்துவம் ஒளிந்துள்ளது எனலாம். இவர்களின் கவிதைகள் உண்டாக்கும் இடைவெளியற்ற மூர்ச்சை வேறுவிதமாகவுள்ளது.
(இருவரது  கவிதைகளை வாசிப்பதற்கான Text கட்டுரையின் கடைசியில் தரப்பட்டுள்ளது.)

ரமேஷ் பிரேமின் கவிதையில் 'என்னை நானே இரண்டாகப் பிளந்தபோது' என்ற வரிகளால் தன்மையிலிருக்கும் உயர்திணையின் விளக்கம் ஒன்றும், றியாஸின் கவிதையில் 'பகல் பொழுது இரண்டாகப் பிளந்துவிட்டது' என்பதில் காலத்தை மையமாகக் கொண்ட திணைகடந்த/அல்திணை அமைப்பும் ஆஜராகிவிடுகிறது. இது போன்ற கவிதைகளின் உருவாக்கம் இவ்விருவரின் இலக்கிய இயக்கங்களுக்கு (Literary Movement) இடைப்பட்ட உறவுநிலைத் தொடர்ச்சி என்றும் கருதமுடியும்.

'எல்லாம் யோசிக்கும் வேளையில் உண்பதும் உறங்குவதுமாக முடியும்' என்பது மெய்ப்பொருள் கவிஞர் தாயுமானவர் பாடலின் ஒருபகுதி. ஆத்திகம்+நாத்திகம் என்ற இரண்டுமே ஒருவனில் அர்த்தநாரியாகவுள்ளது என்பதைக் காட்ட "இரண்டாகப் பிளத்தல்" எனும் வாசகத்தை ரமேஷ் பிரேம் Duo கையாண்டனர் எனலாம். இது ஒரு (Pure Thought) சுத்தமான சிந்தையுடனானது. கொஞ்சம் வேதாந்தமும் (அத்வைதம்) கலந்தது.

ஆனால் றியாஸ் இடமிருந்து வரும் வெளிப்பாடு "பகல் பொழுது இரண்டாக பிளந்துவிட்டது. ஒரு பகுதியிலிருந்து
மறு பகுதிக்காக காத்திருக்கிறேன்." என்ற கால ஏமாற்றத்தினைக் காணலாம். இதுவும் ஒரு அர்த்தநாரி நிலைதான். ரமேஷ் பிரேமின் கவிதைகளில் கடவுள் நம்பிக்கையை விட இரண்டுங்கடந்த  நிலை மேலோங்கியுள்ளது. அதேவேளை றியாஸிடமும் "எவ்வளவுதான் நகர்ந்தாலும் காலம் ஒரே இடத்தில் நிற்கிறது" என்ற மேற்கூறிய இரண்டுங்கடந்த அர்த்தநாரிநிலையினையே காணலாம்.  ஆனால் லௌகீகத்துக்குரியது (Worldly Affairs) முன்கூறியவர்கள் ஒரு மெய்ப்பொருள்க் கவிஞரின் வாசகத்தை ஆரம்பமாக எடுத்து தமது கருத்தைக் கூறியிருக்க, றியாஸ் தனது ஆழ்நிலைத் தூக்கத்தைக் கொண்டு இரண்டுங்கடந்த நிலையினைக் கவிதையில் கொணர்ந்துள்ளார். அத்துடன் ஒருவரின்/பெண்ணின் நடைதான் பிளவுக்குக் காரணம் என்பதையும் கூறிச்செல்கிறார். (றியாஸின் இக்கவிதையில் அறிந்திராமலே×தெரிந்திராமலே இரண்டும் ஒரே பொருளென்றால் அதற்கு மேலும் சாதகமுண்டு.) இதனை Impure Thought என்றும் கருதலாம். ஏனையோர் கருதுவது போன்ற அசுத்தமன்று இது. வேதாந்தத்துக்கும்×மனிதநிலைக்கும் Or துறவுக்கும்×லௌகீகத்துக்கும் இடைப்பட்ட விடயம். அதேநேரம் இருவர் கவிதையிலும் மதம் சாராத தன்மையினை அவதானிக்க முடிகிறது.

வார்த்தைகள் கொண்டு இவர்கள் கவிதையினை இரண்டாகப் பிளந்திருந்தாலும் இந்தவிரு  கவிதைகள் மீதான நமது தனித்த வாசிப்பு ஒரு அர்த்தநாரிநிலையினைத் தோற்றுவிக்கவில்லை. ஆனால் இவர்களது Literary Movement ஒன்றாக இருக்கின்றது என்ற கவனிப்பை ஆட்காட்டிவிடுகிறது.

B: இருவரின் கவிதைகள்.
======
1. தாயுமானவன்- ரமேஷ் பிரேம்.
".............
எல்லாம் யோசிக்கும் வேளையில் உண்பதும் உறங்குவதுமாக முடியும் என்ற தாயுமானவன்
ஆத்திகனா நாத்திகனா என வாதிக்க
என்னை நானே "இரண்டாகப் பிளந்தபோது"
பெண்ணுமாணுமாயிருப்பதை ஏற்றதுண்டு.."

2.சில நினைவின் காலடி.
-றியாஸ் குரானா.
=
"நெடு நாட்களுக்குப் பின்
மிக ஆழமாக உறங்கிக்கொண்டிருந்தபோது,
பகல் பொழுது
"இரண்டாக பிளந்துவிட்டது"
ஒரு பகுதியிலிருந்து
மறு பகுதிக்காக காத்திருக்கிறேன்
மீண்டும் இணையும்போதுதான்
எனது நாள் முடிவடையும்
எவ்வளவுதான் நகர்ந்தாலும்
காலம் ஒரே இடத்தில் நிற்கிறது
நீ நடந்திருக்காவிட்டால்
பகலை இரண்டாக துண்டாட
அறிந்திராமலே ஒரு நாளைக் கடத்தியிருப்பேன்."

சுயாந்தன்.

Comments

Popular Posts