ஜெயமோகன் என்னும் ஆளுமை

ஜெயமோகன் முதலில் கதைகள் மூலமாகவே எனக்கு அறிமுகமானார். அதன் பின்னர் அவருடைய கட்டுரை நூல்களின் மூலம் இலக்கியம், சமூகம், அரசியல் தொடர்பான உரையாடல்கள் தவிர்க்கமுடியாதனவாகிப் போனது.  இவற்றுள் பெருந்தொகுதியானவை தமிழ் விமர்சனச் சூழலில் பெரும் தாக்கத்தை உண்டாக்கி இருந்தது. கோட்பாடு தொடர்பான விமர்சன நிலைகளில் இருந்து முற்றிலும் அந்நியப்பட்டு தனது விமர்சனங்களை முன்வைத்தார். அவை இந்திய ஞான மரபில் இருந்து வெளிப்பட்ட கருத்துக்களாகவே நாம் காணலாம்.

ஜெயமோகனின் காடு நாவல் தமிழில் வெளியான நாவல்களில் மிக உயர்தரமான ஒன்று. முதல் காதலையும் காடு தொடர்பான நினைவுகளையும் இணைத்துப் பெருஞ்சித்திரம் வரைந்திருப்பார். அதில் தமிழின் சங்க இலக்கியமும் ஏனைய செவ்வியல் இலக்கியங்களும் கதைசொல்லியுடன் வந்து கொண்டே இருக்கும். இலக்கியம் தொடர்பான அறிதல் இல்லாதவர்கள் இந்நாவலைப் புரிந்து கொள்வது பெரும் சவாலாக ஆனது.

சங்க இலக்கியங்களான குறுந்தொகை, நற்றிணை போன்றவற்றில் இடம்பெறும் கொற்றவை பற்றிய கதைப்பாடல்களே பின்னர் கண்ணகி காதையாக (சிலப்பதிகாரம்) உருப்பெற்றது என்று ஆய்வாளர்கள் பலர் கருதுகின்றனர்.  அந்த ஆதிக் கதைகளையும், சிலப்பதிகார நிகழ் களத்தையும் இணைத்து "கொற்றவை" என்ற புதுக்காப்பியத்தை ஜெயமோகன் தமிழ்ச் சூழலில் அறிமுகப்படுத்தியிருந்தார். இதற்கு ஜெ பதினைந்து வருடங்களைச் செலவு செய்திருந்தார். இக்காப்பியத்தில் உபயோகிக்கப்பட்ட அநேக சொற்கள் சங்கம் மற்றும் சங்கமருவிய காலத்துக்குரியனவாகவே இருந்தன.

இதைவிட விஷ்ணுபுரம், ஏழாம் உலகம், பின்தொடரும் நிழலின் குரல் முதலான நாவல்கள் குறிப்பிடத்தக்கன. ஏழாம் உலகம் நாவல் இயக்குநர் பாலாவினால் நான் கடவுள் என்ற பெயரில் திரைப்படமாக்கப்பட்டது. இது சைவ சித்தாந்தம் குறிப்பிடும் காளாமுகர், கபாலிகர், திகம்பரர் முதலான அகோரிகளைப் பற்றிய கதை. அதேபோல்
பின்தொடரும் நிழலின் குரல் என்ற நாவல் சோவியத் வீழ்ச்சியையும் கம்யூனிசத்தையும் விமர்சனத்துக்கு உள்ளாக்கியது. கம்யூனிசத்தின் சர்வாதிகார முகம் படைப்பில் வெளிப்பட்டது இந்நாவல் மூலமேயாகும்.

படைப்புலகில் நாவல்கள் எந்தளவுக்கு ஜெயமோகனைப் பெருமெழுச்சி கொள்ள வைத்தனவோ அதற்கு முன் அவருடைய கதைகள் அவரைத் தமிழ்ப் புனைவுலகில் உச்சத்தில் வைத்திருந்தன. அண்மையில் எழுதப்பட்ட பத்துலட்சம் காலடிகள் வரையும் கதைகளின் கதை என்று எழுதிக்கொண்டிருப்பவர்.
கற்பனையின் இருண்டமூலைகளை வெளிச்சமிட்டுக் காட்டுவது ஞாபகம். ஞாபகங்களில் சிறைப்படாதவனே நல்ல எழுத்தாளன் என்று சொல்வார்கள். ஜெயமோகனின் பல கதைகள் ஞாபகங்களால் எழுதப்பட்டுள்ளன. அதற்குள் உண்டாக்கப்படும் கற்பனைகள் அபரிமிதமானவை.  மேலும் பெருந்தொடராக வெளிவரும் வெண்முரசு பகுதிகள் வெகுவான வாசகர்களின் கவனத்தையும் பெற்ற படைப்பு.

பயணக் கட்டுரைகள், இலக்கிய ஆளுமைகள் கட்டுரைத் தொகுதி, நாவல் கோட்பாடு, இந்துமதம், அனுபவம் என்று பெரும்பகுதியை எழுத்துக்கு மட்டுமே செலவழித்துள்ளார். நவீன தமிழிலக்கிய அறிமுகம் என்ற நூல் சில பல்கலைக்கழகங்களில் இலக்கியம் பற்றிய புரிதலுக்கான நூலாகப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அத்துடன் மலையாளத்தின் பிரபல இலக்கியவாதிகளின் கவிதைகளையும் அல்புனைவுகளையும் தமிழுக்கு வழங்கினார். ஈழத்து ஆளுமைகள் என்று கா.சிவத்தம்பி முதல் அ.முத்துலிங்கம் வரையான எழுத்தாளர்களை நியாயமான முறையில் விமர்சித்து எழுதியுள்ளார். அதில் இருவரைப் பற்றிய விமர்சனம் புகழுக்கானது என்ற கருத்தும் உள்ளது.

மேலும் கிறிஸ்த்தவ மதமாற்றங்கம் மற்றும் இஸ்லாமிய அடிப்படைவாதப் பயங்கரவாதங்கள் பற்றியும் வெளிப்படையான விவாதங்களை முன்வைத்துள்ளார். அவரது சாட்சிமொழி போன்ற கட்டுரை நூல்களை இலங்கைத் தமிழர்கள் படித்தால் இங்கு நிலவும் மதம் தொடர்பான விடயங்களைப் புரிந்து கொள்ளமுடியும்.

எனினும் இலங்கை வாசகர்களிடம் ஜெயமோகன் அறியப்படுவது அவருடைய புலி எதிப்புக்காகவும், சினிமா வசனக்காரன் என்பதற்காகவுமே. தமிழில் ஜெ விமர்சிக்காத அல்லது இலக்கியத்தில் தொடாத புள்ளிகள் இல்லை என்பதைத் தய்ரியமாகச் சொல்லமுடியும். இன்றைய நேரடி உரையாடலில் கூட சுந்தரராமசாமி, தி.ஜானகிராமன், அசோகமித்திரன், கி.ராஜநாராயணன் முதலான முன்னோடிகளின் படைப்புக்களைத் நாம் தொட்டுத் தழுவவேண்டும் என்று கூறியிருந்தார். இவர்களைப் பற்றி அறியாதவர்களும் அரசியல் கட்சிகளின் கட்சிக்கொள்கைக்குள் விழுந்த கைலாசபதி போல் பழிவாங்க நினைப்பவர்களுமே இன்றும் அவரை வசைபாடுகின்றனர். அவர் தமிழ் அறிவுச் சூழலில் கொண்டாடப்பட வேண்டிய எந்நாளும் தவிர்க்கமுடியாத  ஆளுமை.

ஜெயமோகன் எழுதிய நூல்களில் தவறவிடக்கூடாதவை. இதில் பத்து நூல்களுக்கு மேல் இடம்பெறவில்லை.

( காடு. கொற்றவை. விஷ்ணுபுரம். பின்தொடரும் நிழலின் குரல்.  ஜெயமோகன் சிறுகதைகள். ஊமைச்செந்நாய்.
சங்கச் சித்திரங்கள்.சுரா நினைவின் நதியில். இந்து ஞான மரபில் ஆறு தரிசனங்கள். சாட்சிமொழி.
இலக்கிய முன்னோடிகள் முழுத்தொகுப்பு.
அமர்தல் அலைதல். நவீன தமிழிலக்கிய அறிமுகம்.  புதியகாலம். பண்படுதல்.
ஜெ.சைதன்யாவின் சிந்தனை மரபு.
பயணக்கட்டுரைகள்)

பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஜெயமோகன்!!

Comments

Popular Posts