இலங்கையில் இந்து மதத்தை நிறுவனமயமாக்கல்: அடிப்படைகள்.

தமிழ்நாட்டிலுள்ள தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்(TNTJ) என்கிற இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்பின் கிளைதான் இலங்கையிலுள்ள ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாத் (SLTJ) அமைப்பு.
தமிழ்நாட்டிலுள்ள மதமாற்றத் தென்னிந்தியக் கிறிஸ்த்வத் திருச்சபையின்  ஒரு கிளைதான் இலங்கையின் வடகிழக்கில் தற்போது தீவிரமாகச் செயற்படும் கத்தோலிக்கத் திருச்சபையினர்.
சரி, இதனை இங்கு குறிப்பிடக் காரணம் இந்த இரண்டு அமைப்புக்களின் பணி இங்கு எவ்வகையானது என்பதுதான். இலங்கையில் 2009 யுத்தம் முடிவடைந்த பின்பு வடகிழக்கில் இந்த இரண்டு அமைப்புக்களின் பிரச்சாரங்கள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன. குறிப்பாக தவ்ஹீத் ஜமாத்தினுடைய பணிகளுக்கு முஸ்லிம் அமைச்சர்களுடைய ரகசியச் செல்வாக்கும்  அதிகமாகவே உள்ளது. ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாத் மாற்றுச் சமூகங்கள் மீது வெறுப்புப் பேச்சுக்கள் மூலம் முஸ்லிம் இளைஞர்களை ஆவேசமான அடிப்படைவாதிகளாக மாற்றி வருகின்றது என்பது அனைவரும் அறிந்த உண்மை. அதே நேரம் இனவாதத்தால் பாதிக்கப்பட்ட முஸ்லிம்களின் இடங்களுக்குச் சென்று இவர்களே முதல் ஆய்வு செய்து இணையம் மூலம் தரவு திரட்டியும் வருகின்றனர். தவீஹ்த் ஜமாத்தின் முக்கியமான உத்தி தங்களைத் தனித்த ஒரு இனமாகக் காட்டிக்கொள்ள மற்றைய மத நம்பிக்கைகளையும் மொழி மரபுகளையும் கொச்சைப் படுத்துவதாகும். இதனை ஏற்கனவே மேற்கொண்டு SLTJ செயலாளர் அப்துர் ராஸிக் இலங்கைப் பொலிசாரால் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டார். விடுவிக்கப்பட்ட பிறகும் இவ்வாறான வெறுப்பு உரையாடல்களில் ஈடுபடுகின்றார்.
ஆரம்பத்தில் மிதவாதிகளாக இருப்பவர்கள் போகப் போக தீவிரவாதிகளாக மாறிவிடுகின்றனர். இவர்கள் முஸ்லிம்களின் அடிப்படைவாதிகளை ஒதுக்குவதுக்குப் பதிலாக ஒட்டுமொத்த முஸ்லிம்களையும் தீவிரவாதிகளாகச் சித்தரிப்பது வருந்தத்தக்கது. இந்தத் தெளிவு உள்ளவர்கள் எல்லா முஸ்லிம்களுமே அடிப்படைவாத ஷிர்க் விரும்பிகள் என்ற கருத்தை ஆழமாக மறுக்கமுடியும். அவர்கள் மத நம்பிக்கையாளர்கள். அந்த மதம் இல்லாமல் ஆக்கப்படும் போது முஸ்லிம்கள் தங்களது அடையாளம் எதுவென்று தெரியாமல் அநாதரவாகிப் போகிறார்கள். நிச்சயமாக அவர்களை இங்குள்ள தமிழர்கள் தனித்த ஒரு இனமாக அடையாளப்படுத்தப் பழக வேண்டும். ஆனால் அந்த அடையாளப்படுத்தலுக்கு மாற்று மதங்கள் மீது கொச்சையான உரையாடல்களையும் ஈ.வே.ராமசாமி கூறிய மோடுமுட்டித் தர்க்கங்களையும் முஸ்லிம்கள் கொணர முயல்வது மிகவும் வேடிக்கையானது.
இங்கு மதச் சார்பின்மை பேசும் குருவிமண்டைகள் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். மத நம்பிக்கையூட்டப்பட்ட எந்த ஒரு இஸ்லாமியரும் தன்னுடைய மதச்சார்பிலிருந்து மீண்டு வரப் போவதில்லை. அது போலத்தான் கிறிஸ்த்தவர்களும்.
உதாரணமாகக் கிறிஸ்த்தவர்கள் தங்களுடைய மதப் பிரச்சாரத்துக்காக வீடு வீடாகச் செல்வார்கள். மிகத் தைரியமாகச் சொல்வார்கள் "உங்கள் பாவங்கள் போக்கப்படும் கிறிஸ்த்தவத்துக்கு வாருங்கள்" என்று. எவ்வளவு அருவருப்பான சொல்லாடல் இது. இதற்கான விளக்கத்தையும் இவர்கள் தருவார்கள். அதாவது கிறிஸ்த்தவர் அல்லாத அனைவருமே பாவிகள் (Devil) என்பது கிறிஸ்த்தவ மத நம்பிக்கை. அது போலத்தான் இஸ்லாமியர் அல்லாதவர்கள் காபிர்கள் (Kafir) என்பது இஸ்லாத்தின் நம்பிக்கை. ஆப்பிரகாமிய மதங்களின் அடிப்படையே மதப் பிரச்சாரங்களை உலகம் முழுமைக்கும் மேற்கொள்வதாகும். இந்த மதப் பரப்புகைக்குப் பின்னால் இருப்பது நிறுவனமயப்பட்ட பணப்புழக்கம். அதனைக்கொண்டு மரபார்ந்த மதங்களையும் பண்பாடுகளையும் கொச்சைப்படுத்தி அழிக்க அருந்ததி ராய், அ.மார்க்ஸ், எஸ்.வி.ராஜதுரை போன்ற அறிவுஜீவிகளை விலைக்கு வாங்குவார்கள். இங்கு கவனிக்க வேண்டிய விடயம் கிறிஸ்த்தவம், இஸ்லாம் இந்த இரண்டும் உலகில் நிறுவனமயப்பட்ட பெரும் மதங்கள் என்பதாகும். இவர்களால் பரிமாற்றப்படும் பணமுறைமைகள் புலனாய்வுப் பிரிவினரால்கூட எளிதில்  கண்டறியமுடியாதவை. இங்குள்ள திருச்சபைகளுக்கான நிதிகள் மீள்கட்டமைப்பு மற்றும் கல்வி நடவடிக்கைகள் என்ற பெயரில்தான் நாடு முழுமைக்கும் கொண்டுவரப்படுகிறது.
இந்த மத மாற்றக்காரர்களில் எத்தனையோ பேரைக் கண்ணெதிரே கண்டுள்ளேன். பலர் கடவுள் பற்றிய கன்றாவியான விளக்கங்களை அளித்துமுள்ளனர். அநேகரிடம் கடவுள் என்றால் என்ன என்று நான் கேட்ட விளக்கங்களுக்கு மூடத்தனமாகவே பதில் சொல்லிச் செல்வார்கள். இந்த நிறுவனமயப்பட்ட மதமாற்றக்காரர்களை தனியொருவராக எதிர்ப்பதென்பது கடினமான விடயம். இப்படியாகப் பணத்துக்காக மிஸனரிகளையும், ஜமாத்களையும் அமைத்து எதிர் மதத்தவர்களின் பூர்வ நம்பிக்கைகளைச் சிதிலமாக்க நினைக்கும் இப்படியான நிறுவனங்களை வேரறுக்க அல்ல எதிர்வினையாற்ற நிறுவனமயப்பட்ட இந்து அமைப்பின் தேவை தற்போது பலரால் உணரப்படுகிறது. அதன் தேவைப்பாடுகள் தற்போது இலங்கையில் அதிகமாகவே உள்ளது.  அந்த அமைப்பு மிஸனரிகள் செய்வது போல மத மாற்றுகைகளுக்காகவும் ஏனைய மதங்களைக் கேவலப்படுத்தவும் அமைக்கப்படக் கூடாது என்பதே அடிப்படையான விடயம்.
புலிகள் தங்களைச் சோசலிஸ்டுகள் என்று கூறிக்கொண்டு அய்ரோப்பிய
ஆதரவுக்காக இந்து மதத்தைக் கண்டு கொள்ளாமலே விட்டனர். இதற்குப் பெரியாரியர்களும் திராவிடக் கட்சிகளும்தான் காரணம். இந்த மூடப்பிள்ளைகளை நம்பி நட்டாற்றில் அழிந்ததே மீதம். அத்துடன் கிறிஸ்த்தவத்தை வலிந்து ஏற்றனர். அவர்கள் இல்லாத தற்போதைய காலத்தில் இங்கே நிகழ்வது மத அரசியல்தான். அதில் எந்த மாற்றுக் கருத்துக்கும் இடமில்லை. மூலைக்கு மூலை இஸ்லாமிய அடிப்படைவாதமும் கிறிஸ்த்தவ மதமாற்றத் திருச்சபைகளும் தோன்றத் தொடங்கியுள்ளது. அவை பணம் மூலமாக நிலத்தைப் பெற்று திருச்சபைகளை நிர்மாணித்து மதப்பிரச்சாரகர்களை அனுப்பி மாற்று மதத்தவர்களை தங்கள் நிறுவனமய மதத்துக்குள் இணைக்கின்றனர்.
அதே நேரம் மொழியுரிமை பேசும் முட்டாள்கள் வடகிழக்கின் சிங்கள மக்கள் வாழும் இடங்களிலும் இராணுவ நிலைகளுள்ள இடங்களிலும் பௌத்த விகாரைகள் வருவதைக் கடுமையாக எதிர்க்கின்றார்கள்.
சைவத்தையும் வைணவத்தையும் இருவேறு கோணங்களில் வைத்து இந்து என்ற மதம் இல்லை என்றும் திராவிட- ஆரிய மாயைகள் உண்மையானவை என்றும் கூறிவரும் கோமாளிகளும், இடதுசாரிகளும் எப்போதும் சமூகத்துக்கு ஆபத்தானவர்கள். இந்த நேரத்தில் போகன் சங்கரின் வரி ஒன்றையும் கூறி முடிப்பது இங்கு பொருத்தமாக இருக்கும்.
"இவ்வளவு ஏற்றத்தாழ்வுகள் கொண்ட ஒரு சமூகம் தொடர்ச்சியாக இடதுசாரிகளை நிராகரிக்கிறது எனில் பிரச்சினை எங்கிருக்கிறது?"
நிச்சயமாகப் பிரச்சனை இருப்பது இடதுசாரிகளிடம்தான். அவர்கள் ஒரு சமூகத்தை அல்லது மதத்தைக் Corner செய்யும் அரசியல் சரிநிலையாளர்கள். இலங்கையில் ஈ.வே.ரா வாசகர் வட்டம் வைத்திருப்பவர்கள் ராமசாமியின் களஞ்சியங்களைப் புரட்டிப் படிப்பதுடன் நின்று விடவேண்டும். அவருக்குச் சிலை வைப்போம், கணபதி தெய்யோ சிலையை வீதியில் போட்டு உடைப்போம், பிராமணர்களை மிதிப்போம், ஆரியத்தை ஒழிப்போம் என்று பதகளிப்பில் கிளம்பி விடாதீர்கள். தமிழ்நாட்டு நிலவரம் வேறு. இலங்கை நிலவரம் வேறு.

Comments

Popular Posts