மரபழிப்பு.

அநேக இந்து மத எதிர்ப்பாளர்களாலும், இடதுசாரிகளாலும், இஸ்லாமிய, கிறிஸ்த்தவ மதப் பிரச்சாரகர்களாலும் "ஆசான்" என்று விழிக்கப்படும் 'நேர்மையில்லாத' எழுத்தாளர் எஸ்.வி ராஜதுரை வெளிநாட்டு மதப் பிரச்சாரகர்களும், இனக் கொலைக்கு ஆதரவானவர்களும் வழங்கும் நிதியை வைத்தே இந்து, இந்திய எதிர்ப்பைத் தனது எழுத்தில் பதிவு செய்து வந்துள்ளார் என்பது ஆறு வருடங்களுக்கு முன்பாகவே சிலர் உறுதிசெய்து எழுதியுள்ளனர். இது எனக்கு பெரும் மனக்கிலேசத்தை உண்டாக்கியது. இவரது கட்டுரைகளையும், அரசியல் நோக்குகளையும் ஒருகாலத்தில் பின்தொடர்ந்தவன் என்ற முறையில் அதற்கொரு பின்னோக்கம் இருந்திருக்கிறது என்றவுடன் சற்று அதிர்ச்சியாகவே இருந்தது. இத்தனைக்கும்மேல் இவர் ஒரு மார்க்சிய எழுத்தாளர் என்பது இங்கு குறிப்பிடப்பட வேண்டிய அம்சம்.
இதனை ஆதாரங்களுடன் எழுதிய ஜெயமோகனுக்கு இருபது லட்சம் நிதிகோரி வசைகளுடன் வழக்குத் தொடர்ந்தவர் எஸ்.வி ராஜதுரை. ஒரு காலத்தில் இவரது கட்டுரைகளையும் இவரை மிகப்பெரும் ஆளுமையாகவும் கருதி வாசித்தவர்களுக்கு இவை பேரிடியாக அமையலாம். அவர் எழுதிய பாதி விடயங்கள் நிதியாதாரங்களுக்காகன உள்நோக்கில் எழுதப்பட்டவை. சுய லாபங்களுக்காகத் தொகுக்கப்பட்டவை. குறிப்பாக இந்து இந்திய பண்பாட்டு எதிர்ப்பு அதற்குள் உள்ளடங்குகிறது.
எஸ்.வி ராஜதுரை நிதிபெற்ற    நிறுவனங்கள் என்று உறுதிப்படுத்தப்படும் விபரங்கள் கீழுள்ளன. இவை இந்திய-இந்து எதிர்ப்பைக் காட்டவும் மதமாற்றங்களை ஊக்குவிக்கவும் பணம்பெற்றுள்ளார்.
1. எவாஞ்சலிகா அக்கடமியா (ஜேர்மனி)
2. International Network of Sri Lankan Diaspora. (INSD-Germany)
3. கிளாட் ஆல்வாரிஸ்
4. Ford Foundation (New York)
5. World Association For Christian Communication. (WACC- Canada & UK)
இவற்றை மேலும் உறுதிப்படுத்த வேண்டுமானால் அவருடைய சிற்றிதழ் விவாதங்களையும் கட்டுரை நூல்களையும் கொண்டு இந்த உள்நோக்கத்தை உறுதிசெய்து கொள்ளலாம்.
இலங்கையிலுள்ள ஷர்மிளா செய்யத் போன்ற ஒரு சில எழுத்தாளர்களும் இதே போன்றதொரு நடைமுறையைக் கடைப்பிடிப்பதாக அண்மைக் காலமாக சில உறுதிசெய்யப்படாத தகவல்கள் தொடர்ந்து வந்தவண்ணமுள்ளன. இவற்றைக் கவனப்படுத்த வேண்டிய தேவை அனைவருக்குமானது. அத்துடன் அந்நிய நிதிபெற்று பண்பாட்டையும் தேசியத்தையும் எதிர்த்து எழுதும் கேவலமான ஒரு நடைமுறை எதற்கு என்ற கேள்வி தொடர்ந்து மனதைச் சஞ்சலப்படுத்துகிறது. இது போன்றவர்களின் தேவையற்ற நிதியாதார எதிர்ப்புகளால்தான் பேரினவாதம் உச்சமடைகிறது.
எத்தனையோ இடதுசாரி மார்க்சியர்கள் அப்பழுக்கற்ற தன்மை கொண்டவர்களாக இன்று வரை வாழ்கின்றனர். உள்நோக்கமற்று சமூகத்துக்காக எழுத்துப்பணி ஆற்றுகின்றனர்.  உதாரணமாக நான் பெரிதும் மதிக்கும் கோவை ஞானி அய்யாவை இங்கு கூறலாம்.
இதன் தொடர்ச்சியாக இங்கு குறிப்பிடப்படவேண்டிய இன்னொரு விடயம் புலிகளுடைய காலத்தில் கிறிஸ்த்தவத்துக்கும், பாதிரியார்களுக்கும் அதீத முக்கியத்துவம் வழங்கப்பட்டு வந்துள்ளது என்பதாகும். அத்துடன் கிறிஸ்த்தவ மதமாற்றங்களைப் புலிகள் ஆதரித்துமுள்ளனர். தங்களுடைய போராளிகளில் பலருக்கு கிறிஸ்த்தவப் பெயர்களையே சூட்டியுள்ளனர். கிறித்தவ முறைப்படிதான் அடக்கம் செய்துள்ளனர். உதாரணமாக; சார்ள்ஸ் அன்ரணி, மில்லர், சூசை. Etc.
அத்துடன் இந்து குருமார்களைவிட புலிகளால் கிறிஸ்த்தவ  பாதிரியார்களுக்கு மிக முக்கிய இடம் வழங்கப்பட்டு இருந்தது.  அதனால்தான் கருணா-புலிகள் பிளவின்போதுகூட மட்டக்களப்பு, திருமலை ஆயர்களை வைத்தே சமாதானம் பேசி தீர்வுகாண தமிழ்த்தலைமைகள் முயன்றுள்ளன. இதற்குக் காரணம் மதச்சார்பின்மை என்று யாராவது சொன்னால் அது அப்பட்டமான திரிபுவாதமாகும்.
புலிகளால் எத்தனையோ இந்து மதகுருக்கள் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டிருந்தனர். இந்து மத குருக்களின் காதுகளிலும், கண்களிலும் துப்பாக்கி ரவைகள் பாய்ந்துள்ளன. புலிகள் விரும்பியது அய்ரோப்பிய நாடுகளின் ஆதரவையும் திராவிடர்களின் உதவியையும்தான். அதனால்தான் ஈ.வே.ராமசாமியை யும் கிறிஸ்த்தவ மதமாற்றங்களையும் புலிகள் அதிகமதிகம் ஆதரித்திருந்தனர். அருகிலிருந்த இந்திய- இந்து தேசியத்தை வெளிநாட்டு நிதிகளுக்காகவும் வெளிநாட்டு ஆயுத உதவிகளுக்காகவும் கண்டுகொள்ளாமல் விட்டனர். இறுதியில் அழிந்தே போனார்கள். இங்கு புலிகள் படிப்படியாக நிறுவ முயன்றது தமிழ்க் கிறிஸ்த்தவ சாம்ராஜ்ஜியம்தான். அண்மைய அவதானிப்புக்களும் தரவுகளும் இதனை உறுதி செய்கின்றது.  ஈரானில் அயோத்துல்லாஹ் அலி ஹோமேனி எப்படி அந்நாட்டுக்கு மதகுருவாக இருக்கிறாரோ அதுபோலத்தான் புலிகளின் தனிநாட்டிலும் கிறிஸ்த்தவ மதகுருக்கள் சுப்ரீம் பவராக இருந்திருப்பார்கள். இயக்கும் சக்தியாக உருமாறியிருப்பார்கள்.
புலிகள் இலங்கை அரசை எதிர்க்கச் சிங்களப் பேரினவாதம் பெருங்காரணமாக இருந்தது என்பது ஒரு உண்மை என்றாலும் அதற்காக அவர்கள் மேற்கொண்ட கிறிஸ்த்தவ மேலாண்மையை அங்கிருந்த பாமர மக்களால் இலகுவில் உய்த்தறிய முடியாமல் போனது துரதிஷ்டமானதாகும். புலிகளை இந்துத்துவ வாதிகள் என்று வரையறுக்க முடியாது. அப்படி இந்துத்துவர்களாக இருந்திருந்தால் இவ்வளவு மக்கள் முப்பதாண்டு யுத்தத்தில் அழிந்திருக்க மாட்டார்கள்.  பண்பாட்டைப் படிப்படியாக அழிக்க வெளிநாட்டு நிதியுதவி பெற்றுவந்த கறுப்பு அய்ரோப்பியர்கள் என்றுதான் புலிகளைக் கூறவேண்டும். இவர்கள் முற்றாக அழிந்ததில் ஆரம்பத்தில் சங்கடங்கள் இருந்தன. ஆனால் காலம் அவர்களுடைய சுயரூபங்களை வெளிப்படுத்தியுள்ளது. ஆதலால் அவர்கள் இன்றைய யதார்த்தத்தில் புறக்கணிக்கப்பட வேண்டியவர்களாக உள்ளனர்.
இப்படித்தான் எஸ்.வி ராஜதுரையின் இந்து இந்திய எதிர்ப்பும் அமைந்துள்ளது. வெளிநாட்டு நிதியுதவிபெற்று தேசியத்துக்குள் கலகம் மூட்டும் எழுத்தாளராக எஸ்.வி.ராஜதுரை அடையாளம் காணப்பட்டுள்ளார்.  அதுபோல பலர் மறைந்தியங்கி வருகின்றனர். அவர்களையும் வெளிப்படுத்த வேண்டியது உண்மையானவர்களின் கடமையாகும்.
கற்கை வலயத்துக்குள் நாம் வந்தவுடன் முதலில் சுயதெளிவு இருக்கவேண்டும். இல்லையென்றால் இப்படித்தான் எஸ்.வி.ராஜதுரை போன்றோரும், மதமாற்றத்துக்கு ஆதரவான இயக்கங்களும் நமது பூர்வ ஞான மரபை அழிக்கவும் நமக்கே உரித்தான தனித்தன்மைகள் தம்முடையவை என்று கூறி திரிக்கவும் துடித்துக்கொண்டிருக்கின்றன. இவற்றை வெளிப்படையாகப் பேசுவதில் சிக்கல்கள் இருக்கின்றன. பேசிய உடனேயே இந்துமதவாதி என்று கூவத்தொடங்கி விடுவார்கள்.
இரண்டு உதாரணங்களுள்ளன.
1. கிறிஸ்த்தவ முனைவர் ஒருவர் திருக்குறள் கிறிஸ்த்தவ நூல்தான் என்று பொய்யான தரவுகளால் மூடத்தனமாக ஆராய்ச்சி செய்து கூறுகிறார்.
2. எஸ்.வி.ராஜதுரை சொல்கிறார் கண்ணகிக்கும் கோவலனுக்கும் திருமணம் செய்து வைத்தது பிராமணர் என்பதனால் சிலப்பதிகாரத்தைத் தமிழர்கள் தூக்கியெறிய வேண்டும் என்று.
'சரி, மரபை அழித்தால் என்ன?. அது அழிந்து விட்டுப் போகட்டுமே.' இப்படி நா கூசாமலும் சிந்திக்காமலும் கூறுபவர்கள்தான் அதிகமுள்ளனர். மரபு அழிவதற்கு முன்னால் இப்படித்தான் இந்த ''குருவிமண்டைகள்'' பண்டைத்தமிழ் மரபுகளைத் திரிக்க முனைவார்கள் என்பதை ஞாபகம் வைக்கவேண்டும்.
00

Comments

Popular Posts