ஆறுமுகநாவலர் சாதிவெறியரா: சில புரிதல்கள்.

முகநூல் மற்றும் இணையப் பிரச்சாரங்களில் சில முஸ்லிம் அறிவுஜீவிகள் மற்றும் சில இடதுசாரிகள் முன்வைத்த கோமாளித்தனமான கருத்துக்கள் இவை.
1. ஆறுமுகநாவலர் ஒரு இந்துச் சாதி வெறியர்.
2. இந்தியாவிலுள்ள தமிழர்கள் போல இலங்கைத் தமிழர்களும் இந்துக் கொள்கைகளை விட்டு திராவிடர்களாக அணிசேரவேண்டும்.

இந்த இரண்டு கருத்துக்களையும் உற்று நோக்கினால் தெரிவது அப்பட்டமான "பிரித்தாளும் தந்திரம்." ஆறுமுகநாவலர் வர்ணாச்சிரமத்தை ஆதரித்தார் என்பதைத் தாண்டி அழியும் நிலையில் இருந்த ஏராளமான தமிழ் நூல்களைப் பதிப்பித்தார். வண்ணார் பண்ணையில் முதல் சைவ ஆங்கிலப் பாடசாலையை நிறுவினார். ஆங்கிலேயருக்கு எதிராகப் போராடினார். யாழ்ப்பாணத்து புலமைத்துவ மரபில் பெருமளவு மாறுதலை ஏற்படுத்தினார். இங்கு உள்ள முக்கியமான விடயம் யாழ்ப்பாண மையவாதம். இதனைக் கொண்டு ஏனைய இந்துத் தமிழர்களைப் பிரித்தாள்வதற்கான தந்திரம். உதாரணமாகத் தமிழகத்தின் தர்மபுரி போன்ற மாவட்டங்களில் ஆரம்ப காலத்தில் வன்னியர் என்ற இனக்குழுமத்தினர் நாயிடுக்களுக்கும் நாயக்கர்களுக்கும் அடிமைகளாக இருந்ததாக வரலாறு கூறுகிறது. அல்லது நிலமற்றவர்களாக வன்னியர் இருந்தனர். இதன் பின்னர் மருத்துவர் ராமதாஸ் தலைமையினால் ஆன பாட்டாளி மக்கள் கட்சி வன்னியர் சாதிக் கட்சியாக உருமாறி அந்தச் சமூகத்தை மேனிலைக்குக் கொண்டுவந்தனர். இதே போலத்தான் அங்குள்ள நாடார் சமூக நிலைப்பாடும். நாடார் இன்று தமிழகத்தில் பேர் சொல்லும் படியான வணிக முதலாளிகளாக உள்ளனர். இதற்குக் காரணம் இனக்குழும எழுச்சி. ஆனால் அந்த முழுமையான எழுச்சியின் பின்னரும் அதனைக் கடைப்பிடிப்பதுதான் தவறு. ஏனைய இனக்குழுமத்தவர்களை அடக்குமுறைக்கு உள்ளாக்குவதுதான் பெருந்தவறு. இப்போது தமிழகத்தில் நடைபெறும் தலித் எழுச்சி வரவேற்கப்படவேண்டிய ஒன்று. அதனை எந்த ஒரு இந்து மதத்தவர்களும் தடுக்கவில்லை.
இவர்களாகவே கற்பிதம் செய்துள்ளனர்.

                                                        வவுனியாவிலுள்ள நாவலர் சிலை

இலங்கையில் இந்துமத ரீதியில் தமிழ் மக்கள் ஒற்றுமைப்பட முன்வரும்போது ஆறுமுக நாவலரைச் சாதிய வெறியராகக் கட்டமைக்கும் வழக்கத்தைப் பலர் தற்போது முன்னெடுக்கத் தொடங்குகின்றனர். இங்கு ஆறுமுகநாவலரை இவர்கள் தொடக்கப்புள்ளியாக முன்வைக்கக் காரணம் அவர் சைவ மரபின் தொன்மங்களை ஆய்ந்த அறிஞராகத் தன்னை சமூக மறுமலர்ச்சிக்கு நிலைப்படுத்தினார் என்பதும் இந்துமத மறுமலர்ச்சியையும் ஒற்றுமையையும் விரும்பினார் என்பதுதான் காரணம். இது பிற்காலத்தில் உருவான இடதுசாரிகளுக்குப் பிடிக்கவில்லை.

ஆறுமுகநாவலரின் ஆளுமைகளை மறைத்து முழுமையான வெள்ளாளச் சாதிய வெறியர்  என்று அடையாளப்படுத்துபவர்கள் யாரென்ற தெளிவு நம்மிடையே ஏற்பட வேண்டும்.

1. கிறிஸ்த்தவ மிஸனரியால் தூண்டப்பட்ட ஆய்வாளர்கள்.
உதாரணமாக றிச்சர்ட் வாட்சன் வைரமுத்து.
2. இஸ்லாமிய அறிவுஜீவிகள் என்ற பெயரில் உலவும் மத அடிப்படைவாதிகளும் பின்நவீனத்துவர்களும்.
3. இடதுசாரிகளாகவும் திராவிடப் பிரச்சாரகர்களாகவும் தம்மை அடையாளப்படுத்தும் போலி முற்போக்காளர்கள்.
4. ஆறுமுகநாவலர் செய்த சமூகச் சேவைகளை வரலாற்றின் துணைகொண்டு பார்க்கும் பிரக்ஞை அற்றவர்கள்.

இங்கு முஸ்லிம்கள் ஆறுமுகநாவலரைச் சாதி வெறியராக மட்டுமே குறிப்பிடுகின்றனர். ஆனால் அவரது சமூக மொழிப்பணிகளை அந்த நூற்றாண்டில் யாரும் செய்தவரில்லை. உ.வே.சா கூட இந்த வகையில் அடங்குவார். அய்ரோப்பியரின் ஆட்சிமுறையில் கிறிஸ்த்தவ மதமாற்றங்களைத் தடுக்கும் பணி அவருடையதானது. 1835ம் ஆண்டு வரைக்கும் தமிழ்நாட்டில் கிறிஸ்த்தவர்களிடமும் மட்டுமே அச்சு இயந்திரங்கள் இருந்தன. இதனால் தமிழ் நூல்கள் அச்சிடப்படவில்லை. அக்காலப்பகுதியில் மதப் பிரச்சாரத்தை நோக்காகக் கொண்ட கிறிஸ்த்தவ நூல்கள் மட்டுமே அச்சேறின. இதன் மீது அழுத்தமான உடைப்பை மேற்கொண்டவர்களில் ஒருவர் ஆறுமுகநாவலர். (1822-1879) இவரது காலத்தில் பெரியபுராணம் தொடக்கம் நன்னெறி வரையான நூல்கள் அச்சேறின. தனியே சாதிவெறியராக இருந்தார் என்ற பிரித்தாளும் தந்திரம் இப்படியான தருணங்களில் இந்த அறிவு ஜீவிகளால் மிக லாவகமாகப் பிரயோகிக்கப்படுகிறது.

அடுத்தது இந்தியாவிலுள்ள நிலைப்பாடு வேறு இலங்கையின் நிலைப்பாடு வேறு. முதலில் திராவிடம் என்பதே ஒரு போலிக் குறியீடுதான். இந்தியாவிலுள்ள தமிழர்கள் போல இலங்கைத் தமிழர்களும் இந்து மதக் கொள்கைகளை விட்டு திராவிடர்களாக அணிசேரவேண்டும் என்ற வாதத்தை ஏராளம் இஸ்லாமியர்கள் முன்வைக்கின்றனர். இருப்பதிலேயே பெரிய கோமாளிக்கருத்து இதுதான்.  அவர்கள்மீது முன்வைக்கக் கூடிய ஒரு கேள்வி தங்களுடைய இஸ்லாமிய மார்க்கத்தைவிட்டு அபாயா மற்றும் இஸ்லாமிய அடிப்படைவாதங்களை உதறி தமிழக இஸ்லாமியர்கள் போல உங்களால் மாறமுடியுமா?. இல்லைத்தானே. இங்கு இந்த இடத்தில் இப்படியான கேள்விகளைக் கேட்கும்போது மதவாதி என்ற முத்திரை எம்மீது இலகுவாகக் குத்தப்படுகிறது.

                                           யாழ்ப்பாணப் பாடசாலையிலுள்ள நாவலர் சிலை

இஸ்லாமிய அடிப்படைவாத அதிகாரம் சிங்களப்பேரினவாத நிழலில் நின்று கொண்டு ஏராளமான அட்டூழியங்களை இந்துத் தமிழர்கள் மீது மேற்கொண்டுள்ளது. இப்போதுகூட அடையாள அழிப்பு இந்துப் பகுதிகளில் நடக்கின்றது. காணிப்பறிப்புகள் நடைபெறுகிறது. (இது பற்றிய மேலதிக ஆதார விபரங்களுக்கு எனது பழைய புளக்கர் பதிவுகளைக் காணவும்.) அண்மையில் கல்முனையில் வெறும் பிரதிமேயர் பதவி ஒரு தமிழருக்குக் கிடைத்தவிட்டது என்று ஊர் ஊராகச் சென்று ஆர்ப்பாட்டம் செய்தவர்கள்தான் இந்த முஸ்லிம் அதிகார மையங்கள். எனது பதிவுகளில் நான் திரும்பத்திரும்ப முன்வைக்கும் கருத்து முஸ்லிம் அதிகார அடிப்படைவாத மையங்களையும் முஸ்லிம் மக்களையும் ஒரு குடையில் வைத்து நான் பார்ப்பதில்லை என்பதாகும். தமிழ்நாட்டில் சிறுபான்மையினராக இருக்கும் இஸ்லாமியர்கள் தமிழ்த்தேசியம் தங்களை அரவணைக்கிறது என்பதால் அதனுடன் இணைந்து இந்தியத் தேசியத்தை எதிர்க்கிறார்கள். இங்கே சிங்களத் தேசியம் முஸ்லிம்களை அரவணைத்ததால் சிங்களவர்களுடன் இணைந்து தமது அதிகாரத்தைத் தமிழர்கள்மீது பிரயோகிக்கிறார்கள். இவற்றுக்கு இடையில் சகோதரத்துவம் என்று போலியான சப்பைக்கட்டுக்கள் கட்டித் தமிழர்கள் இந்துக்கள் அல்ல. இந்துக்கள் சாதிவெறியர்கள் என்ற பிரம்மை தமிழர்களுக்குத் தெளிக்கப்படுகிறது.

என்னைப் பொறுத்தவரைக்கும் இலங்கையில் முஸ்லிம்கள் தனியான ஒரு இனம். அவர்கள் சிங்களவர்களைப்போல,  தமிழர்களைப்போல தனித்துவமானவர்கள். அவர்கள் ஒரே இனம் என்ற கோஷம் எழும்போதுதான் இனப்பிரச்சனைகள் இங்கே தலைதூக்குகின்றன. அனைவரும் தமது மதத்தைப் பின்பற்றவும் போற்றவும் உரிமையுண்டு. அது அடுத்தவர் மதங்கள் மீது காழ்ப்பாக வெளிப்படாத வரைக்கும் வன்முறைகள் அடங்கி முடங்கிக் கிடக்கும்.
ஆறுமுகநாவலர் நவீனத்துவம் பரவ முன்பாகவே சாதியை ஆதரித்த ஒருவராக இருந்திருக்கலாம். ஆனால் தனது பிற்காலக் குறிப்புகளில் அந்த நிலையிலிருந்து மாறிய கருத்து வெளிப்பாடுகள் அவரால் எழுதப்பட்டுள்ளது. ஆக அவர் ஒரு சாதி வெறியர் இல்லை. வெறியர்கள் கடைசிவரையும் மாறமாட்டார்கள். அவரை வெறுமனே சாதி வெறியராக அடையாளப்படுத்தாமல் சமூக எழுச்சிக்கும் புலமைத்துவ மரபுக்கும் வித்திட்டவர் என்று அடையாளப்படுத்துவது அவர் செய்த பணிகளுக்கு வழங்கும் கௌரவம்.

00

Comments

Popular Posts